Sunday, December 19, 2010

வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?.....














உங்களுகென்று  உள்ள  கருத்துக்களைக்
கொண்டுமற்றவர்களை  மதிப்பிட்டு விடாதீர்கள் .

வெளித் தோற்றத்தை  வைத்து யாரையும்  மதிப்பீடு
செய்ய  வேண்டாம் , பழகிப்  பார்த்து முடிவு  செய்யவும்.

பிறர்  கூறுவதை  உன்னிப்பாக  கவனிக்கவும் .

எல்லோருக்கும்  தலைக்கனம்  உண்டு. அதற்காக பிறரை 
துச்சமென  மதிக்க வேண்டாம், வெறுக்கவும் வேண்டாம்.
குறைவாகப் பேசுங்கள், அதன் மூலம் நிறைய கற்றுக் 
கொள்வீர்கள். 

பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள். அதே போல 
உங்களுடைய  நேரத்தையும்  பிறர் வீணாக்க  ஒரு
போதும் அனுமதிக்காதீர்கள். 

ஒருவருக்கு  உதவி  செய்ய நினைத்தால்  அவர் பற்றிய 
முழு விபரமும்  அறிந்து, பின் உதவி செய்யுங்கள். 

நீங்கள்  மேலதிகாரியாக இருந்தால்  உங்களின்  கீழ் 
பணி புரிபவர்களிடம், முடிவு செய்தல் , செய்த முடிவை 
மாற்றுதல், வேலையை  முடித்தல்  இவற்றில்  முழு 
சுதந்திரம்  கொடுங்கள். 

எல்லா குழந்தைகள்  மீதும்  அன்பு செலுத்துங்கள். இதன் 
மூலம் குழந்தைகளிடமும் அவர்களின் பெற்றோரிடமும் 
நன்மதிப்பு பெற முடியும். 

ஒருவரை  பாராட்டும் போது  முழு மனதுடன்
பாராட்டுங்கள். போலியான  பாராட்டு  எப்போதுமே
நன்மை தருவதில்லை. 

தவறுகள்  மனிதர்களிடம்  இயல்பு. அதனை
அனுமதிப்பதில் தவறு இல்லை. மீண்டும்   'அப்படி' 
நடக்காமல்  பார்த்துக்கொள்ள வேண்டும்
என்று கேட்டுக் கொள்ளுங்கள். 

உங்களை சுற்றிஇருப்பவர்களே  உங்கள்  கூட்டாளிகள்
மற்றும் நண்பர்கள். உங்களின்  உலகமே  அவர்களாக
இருக்கக் கூடும். அவர்கள் அனைவரையும்  ஒரே
நேரத்தில்  பகைத்துக் கொள்ள  வேண்டாம். 

உங்களுக்கு  ஒன்றைப் பற்றி  தெரியாவிட்டால்
உண்மையை சொல்லி விடுங்கள். தெரியும்
என்று நடிக்காதீர்கள். 

தவறு செய்தால்  அதைஒப்புக் கொள்ள  தயங்காதீர்கள்..!
அப்படி ஒப்புக் கொண்டால் மற்றவர்களுக்கு உங்களை 
பிடித்துப் போகும். 

வெற்றிபெற்றால்  எல்லோருடனும்  சேர்ந்துதான்  இந்த 
வெற்றி  என்று அனைவருடனும்  பகிர்ந்து  கொள்ளுங்கள்.

Tuesday, December 14, 2010

மனம் அமைதியாக இருக்க வேண்டுமா? ....II



தான்  வாழும்  வாழ்வில்  எதிர்பார்ப்பு  இல்லாதவனே 
நல்ல மனோபாவம்  கொண்ட மனிதன் 

        இன்று பலரது வாழ்க்கையில்  அவர்கள்  
அனுபவிக்கும்  துன்பத்திற்குக் காரணம்  எதிர்பார்ப்பு.
       பெற்றோர் பிள்ளைகளிடமும் ,முதலாளி  
தொழிலாளியிடமும், தொழிலாளி முதலளியிடமும் 
பக்தன் கடவுளிடமும்  ஏதோ ஒன்றை எதிர் பார்த்தே 
(கடவுள் தவிர) ஒருவருக்கொருவர்  நட்பு  அல்லது உறவு
கொள்கின்றனர். ஆனால் அது நிறைவேறாத
நிலையில்  அவர்களின் எதிர்பார்ப்பு  நிகழாத  நிலையில் 
மனது மற்றவர்களிடம்  வெறுப்புக்  கொள்கிறது. 
        நாம் ஒன்றின் மீது  அளவு கடந்த  அன்பு 
வைத்திருந்தால்அதை சுதந்திரமாக  விட்டுவிட
வேண்டும்.அது நம்முடையாதாக இருந்தால் ,நம்மைத்
தேடி அது மீண்டும் வரும்இல்லையேல் அது வராது.
        பெற்றோர் பிள்ளை உறவாக இருந்தாலும் சரி,
கணவன்மனைவி  உறவாக இருந்த்னாலும் சரி 
அல்லது மற்ற உறவுகளாக இருந்தாலும் சரி  மேலே 
சொன்ன உணர்வில் நாம் எல்லோருடனும் வாழக் 
கற்றுக் கொண்டால் நம் வாழ்க்கை என்றுமே
இனிமைதான். 

சுய அறிவைப் பயன் படுத்துங்கள்  

இன்றைக்கு  நமது மனம் சொல்வதையே அறிவு
கேட்டுக் கொண்டிருக்கிறது .ஆனால், எப்போதுமே
நம் அறிவு சொல்வதை மனம் கேட்க பழக்க வேண்டும். 
     மனம் ஒரு குதிரையாக இருக்க வேண்டும் ,அறிவு 
அதில் ஏறி  சவாரி  செய்ய  வேண்டும் . இதுதான் சுகமான
வாழ்க்கையாக இருக்கும் .ஆனால் இன்றைக்கு அறிவு 
குதிரையாக இருக்கிறது .மனம் அதி ஏறி இலக்கில்லாமல் 
சவாரி செய்து கொண்டிருக்கிறது. 
       மனம் சொல்வதை கவனியுங்கள், சுய அறிவால் 
அலசுங்கள், பின்பு  செயலில்  இறங்குங்கள் . இப்படிச்
செய்தால் மனதைப் போட்டு குழப்ப வேண்டிய 
அவசியமே இல்லை. சரியான தீர்வு மனதில் 
தானாகவே  உதிக்கும். 

நான்தான் (என்னால்தான்) எல்லாம்  என்கிற
உணர்வை விரட்டுங்கள்

         இயல்பாகவே நம்மில் பலர்  வாழ்க்கை இன்பமாக 
இருந்தால்  அதற்கு  காரணம்  தான்தான்  என்றும் 
தன்னால்தான்  அது  நடந்தது   என்றும்  நெஞ்சை 
நிமிர்த்திக் கூறுவர். 
       ஆனால் அவர்கள் வாழ்வில்  எதாவது துன்பம் 
நேர்ந்தால் அதிலிருந்து (அப்பொறுப்பிலிருந்து) 
தன்னை எப்படியாவது விடுவித்துக் கொண்டு 
பழியை மற்றவர் மீதோ அல்லது நேரம்  என்று 
தலைவிதி   மீதோ போட்டு விடுவார்கள்.
           அதிமேதாவியகவோ, புத்திசாலியாகவோ 
ஒரு போதும் உங்களை  நீங்களே நினைத்து   
கர்வம் கொள்ள  வேண்டாம்.
           ஒருவன் சாஸ்திரங்களை  முழுமையாக 
கற்ற  பிறகும் கூட முட்டாளாக இருக்கக் கூடும் 
என்கிறது  பஞ்ச தந்திரம்.
         அறிவாளியாக இருப்பது வேறு ,
புத்திசாலியாக இருப்பது  வேறு - சற்று ஆழ்ந்து  
யோசியுங்கள், புத்திசாலிகளாக  நாம் இருந்தால் 
இதைப்  போன்ற அறிவுரைகள் பெரியோர்கள் 
மூலம் நாம் பண்பட  கிடைத்திருக்காது.
      மனதில்  தோன்றும்  கற்பனையான  பிரச்சினையில் 
மூழ்கி அநாவசியமாக  டென்சன்  ஆகாமல் இருக்க நாம் 
பழகிக் கொண்டால்  அது நம் மனத்திற்கு இதம் தரும்
விஷயமாக மாறும்.நாம்  நம்மையே ரிலாக்ஸ்  
செய்து கொள்ள உதவும்.  

பரந்த மனப்பான்மை  நம்மை மேம்படுத்தும் 

        நமக்கு  கீழ்நிலையில்  உள்ளவர்களிடமிருந்து  
வரும்  நல்ல ஆலோசனைகளை - நமக்கு  அது  சரி 
என்றே தோன்றினாலும் -ஏற்றுக் கொள்ள 
மறுக்கின்றோம்.
      ஒரு பெரிய பிரச்சினைக்கு  ஒரு சிறுவனிடமிருந்து 
கூட நமக்கு நல்ல தீர்வு கிடைக்கலாம். தெருவில் 
நம்மை கடந்து செல்லும் மூன்றாம் மனிதரிடம் கூட 
நல்ல பதில் கிடைக்கலாம். 
       பரந்த மனப்பான்மையுடன்  மற்றவர்களது  
கருத்துக்களை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்வோம். 
இதன் மூலம் நமக்கு நம் மனதில்  புதிய கருத்துச்
சிந்தனைகளுக்கான  களம் பிறக்கும். 

மனதை அமைதிபடுத்த தியானம்  பழகுவோம் 

     இந்த உலகம்  எப்போதுமே  எளிமையானதுதான்
சிக்கல் ஆரம்பிப்பது   நம்மிடமிருந்துதான். நாம்  
எப்போதுமே  நாமாகவே இருக்க இயல்பாகப் பழகிக் 
கொள்ள வேண்டும். அதாவது ,மனிதன் 
மனிதனாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

எப்படி? 

     நாம் நமக்குள்ளேயே  அமைதியாக இருந்து பழக
வேண்டும். அப்படி பழகினால்,  நாம் நம்மையே  
அறிய முடியலாம், நம் மனத்தை  அறியவும்  அமைதி 
படுத்தவும் முடியலாம். இதற்கு சிலவகையான 
தியானப் பயிற்சிகள்  உதவும். 
        நமது வாழ்விற்கு பயன்படாத  எந்த ஒரு ஆன்மீக 
உபதேசமும் நம்மை கண்டிப்பாக மேம்படுத்த முடியாது.
      தெய்வ வணக்கம்  நம் மனதை மரத்து போக செய்யும்.
உடம்பு வலிக்கும், ஆனால் வலிக்காதது போல்  
தோன்றும். நோய் இருக்கும், ஆனால் ஆரோக்யமாக 
நடமாடச்  சொல்லும். கஷ்டங்கள் இருக்கும் , 
அனால் மனதில் கவலைகள் தோன்றாது. 
எது நடந்தாலும்  அது நடக்கத்தான் செய்யும்  என்ற 
அலட்சிய மனோபாவத்தை உண்டாக்கும்.
         கவலையோ, பயத்தையோ  பொருட்படுத்தாத 
ஒரு நிலையை  தெய்வபக்தி  உண்டாக்குகிறது. 
மனப்பூர்வமாக  ஈடுபாட்டோடு  தெய்வத்தை 
வணங்க வேண்டும். 
           முட்டாள் புததிசாலியானால்  ஞானத்திற்கு 
வருகிறான்.புத்திசாலி முட்டாளுகும் போது 
காமத்திற்கும் ,போதைக்கும் இன்னும் பல 
எதிர்மறையான  செயல்களை  செய்வதற்கும் 
ஆரம்பிக்கிறான்.
         நாம் அடையும் மகிழ்ச்சியும் உண்மையானதல்ல ,
நாம் அடையும் துன்பமும்  உண்மையானதல்ல .மனமே 
இரண்டையும்  வேறு படுத்துகிறது. 

 மனதிற்கு மருந்து  பணமா அல்லது 
தூய்மையான  அன்பா?

    பணம் என்பது  நாம் வழங்கும் சேவை, செய்யும்
வேலைக்கான வெகுமதி மட்டுமே.
        நல்ல மனோபாவம்  கொண்டவர்கள்  மனிதர்கள்  
மீது அன்பு செலுத்தி  பணத்தை ஒரு கருவியாக 
மட்டும் செயல் படுத்துவார்கள்.ஆனால் இன்று 
பணத்தின் மீது தான் அன்பு செலுத்தப்படுகிறது.
        பணம்தான் முதன்மையானது  என்ற எண்ணத்தை 
மனதில் ஏற்றிவிட்டால் உறவுகளும் நட்பும் இனிக்காது. 
        உறவுகளும் நட்பும்  முதன்மை  பெற்றால் பணம் 
நமது அடிமை .ஆனாலும் உறவுகளும்  தூய  மனத்தால்
நம்மை நேசிக்க வேண்டும்.வேஷங்கள் என்றுமே
நிலைப்பதில்லை.
       தூய அன்பு என்பது  நாமும் நன்றாக இருக்க
வேண்டும் , மற்றவர்களும்  நன்றாக இருக்க 
வேண்டும்  என்ற உணர்வுதான்.
       நல்ல மனோபாவம்  கொண்ட மனிதனின்  வாழ்க்கை
  இன்பம்  நிறைந்த  பூஞ்சோலை.நம் வாழ்க்கையில்
நம்மை நாடி வரக்கூடிய துன்பங்களை , நாம் ஒரு சிறந்த 
அனுபவமாக  ஏற்றுக்கொண்டால்
நம்மால் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.
         அன்பின்  வாசத்தை  உணராத மனிதர்கள் 
இருந்தும் என்ன பயன்?... 

நிறைவாக....

இந்த  உலகில் நம்மைத் தாக்குவது இரண்டு 
வகையான  சோகங்கள் 
1 . நாம் ஆசைப்பட்டது கிடைக்காத  போது ,
2 . நான் ஆசைப்பட்டது  கிடைத்து  அதைக்
காப்பாற்றிக் கொள்ள பாடுபடும் போது . 
         ஆசைப் படாமல் எதையும் பெற முடியாது .
ஆனால்  ஆசையே அளவிற்கு  அதிகமானால்  
துன்பமே மிஞ்சும்.
          எப்போதுமே நாம் நம் தேவையை அதிகரித்துக் 
  கொண்டு  பிச்சைக்காரனைப் போல் பணத்திற்கு  
அலைவதை விட , நம்முடைய  தேவைகளை குறைத்து 
கொண்டு  நம்மால்  அரசனை விட  சுகமாக  வாழ முடியும். 
      முயற்சி  செய்து பார்ப்போமே ...!
வாழ்க்கையில்  உணர்சிகளுக்கு  இடம்  கொடுக்கும் போது 
சற்றே நிதானித்து  அறிவையும்  பயன் படுத்துவோம்.
       மனங்களைப் புரிந்து கொள்ளுங்கள் .புரியாமல் நாம
என்ன சொன்னாலும்  சொல்வது ஒன்று செய்வது 
ஒன்றாகவே  இருக்கும்.
       துன்பம் நமக்கு சுமையல்ல .மனதில் இருப்பதை
  நல்ல உறவுகளிடமும்  ,நல்ல நண்பர்களிடமும்  
பகிர்ந்து கொள்ளுங்கள்.அடுத்தவர்களிடம்  பகிர்ந்து
கொள்ளும் போது துன்பம் தொலைந்து போகிறது 
இன்பம்  இரட்டிப்பாகிறது. 
       

           ( என்னைத்  கொஞ்சம் கொஞ்சமாக  
தெளிவு படுத்தும் சுவாமி விவேகானந்தர்
கவியரசு  கண்ணதாசன் மற்றும்  தென்கச்சி
சாமிநாதன்  ஆகியோரது  எழுத்துக்களிலிருந்து )